நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 22, 2017

கனலில் கலந்த கனல் 1

மன்னவனே ஆனாலும்
பொன்னளந்து கொடுத்தாலும்
பெண் மனதை நீ அடைய முடியாது!..
வாள் முனையில் கேட்டாலும்
வெஞ்சிறையில் போட்டாலும்
உடலன்றி உள்ளம் உனைச் சேராது!..
***

ஆனால்,
அந்த உடலைக் கூட
மாற்றான் கண்களுக்குக் காண்பிக்காமல்
அக்னிக் கொழுந்துகளுக்குள்
குழம்பாக்கிக் கொண்டாள் - மாதரசி ராணி பத்மினி!..

அவள் மட்டுமல்ல..
அவளைப் போல் ஆயிரமாயிரம்..
அரசி முதல் அந்தப்புரச் சேவகி வரைக்கும்!..

அந்த ஆரணங்குகளின் திருவடித் தாமரைகள்
அடியனின் தலையின் மேல்!..



எழுபத்து நான்காயிரத்து
நானூற்று தொண்ணூற்றொன்பது
திருமேனிகளுக்குக் கீழாக -

ராணி பத்மினியின் பொன்னுடல்!..

ஆம்.. எழுபத்து நான்காயிரத்து ஐநூறு மாதரசிகள்!..

புண்ணிய பாரதத்தின் வடமேற்கு எல்லையான ராஜஸ்தானத்தில்
எழுநூற்றுச் சொச்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு இது!..

இந்நிகழ்வு நடந்தாகச் சொல்லப்படுவது - 
1303 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில்!..

ராஜஸ்தானம் என்றாலும் அதற்குள் பற்பல நாடுகள்..
அவற்றுள் வலிமை மிக்கதாக விளங்கிய நாடு மேவார்...

போர் தொடங்கிய பத்து நாட்களுக்குள்
இந்த கோர சம்பவம் நடந்து முடிந்திருக்கின்றது..

இத்தகைய கோரம் நிகழ்வதற்குக் காரணம் - மாற்றானின் படையெடுப்பு..

படையெடுக்கும் யாருக்கும் -
அந்நாட்டை அடிமைப்படுத்தி
அதனை தன் ஆளுகைக்குள் கொண்டு வருவதும்
அதன் செல்வங்களைக் கைப்பற்றுவதும் தான் நோக்கமாக இருக்கும்..

இங்கேயும் அப்படித்தான்.. ஆனால்,
நோக்கம் பொன் அல்ல.. பொருள் அல்ல!..

பெண்.. அழகே உருவான மங்கை..
அதுவும் இன்னொருவனின் மனைவி!..

இத்தகைய கயமையுடன் வந்தவன் - அலாவுதீன் கில்ஜி!..

இவன் தான் -

தில்லியை 1290 முதல் 1296 வரை ஆட்சி செய்த கில்ஜி வம்சத்தின் முதல் சுல்தானும் தனது மாமனும் ஆகிய ஜலாலுதீன் பைரூஸ் கில்ஜியை வஞ்சகத்தால் போட்டுத் தள்ளி விட்டு ஆட்சியைப் பிடித்தவன்..

24 பிப்ரவரி 1296 அன்று
பன்னிரு ஜோதி லிங்க ஸ்தலங்களுள் ஒன்றாகிய சோமநாதபுரம் 
ஸ்ரீசோமேஸ்வரர் திருக்கோயிலைத் தகர்த்து எறிந்தவன்..

பின்னும் வெறி அடங்காதவனாக
அடுத்த சில மாதங்களில் - துவாரகாபுரியில் விளங்கிய
ஸ்ரீகிருஷ்ணன் திருக்கோயிலையும் தரைமட்டமாக்கியவன்..

அத்தோடு நில்லாமல் -
குஜராத் மன்னன் இரண்டாம் கர்ணதேவனை வீழ்த்திய பின் 
நிர்க்கதியாக நின்ற பட்டத்தரசி கமலாதேவியைக் கவர்ந்து சென்று
மத மாற்றம் செய்து திருமணம் என்ற பேரில் நாசம் செய்தவன்..

மகாராணி கமலாதேவியை சிறை பிடித்த வேளையில் -
உடனிருந்த அந்தப்புர சேவகனையும் இழுத்துக் கொண்டு போனார்கள்..

அவனது பெயர் - சந்த்ராம்..

ஆணாக இருந்தும் ஆண் தன்மையற்றவன் சந்த்ராம்...
சந்த்ராமின் அழகைக் கண்டு மயங்கினான் - கில்ஜி..

விளைவு!?..

அவனையும் மதமாற்றம் செய்தான்..
அவனுக்கும் புதுப் பெயர் ஒன்றை வைத்தான்..

அந்தப் பெயர் - மாலிக் கபூர்..

அந்தப்புர நங்கையர் பலர் இருந்தும்
மாலிக் கபூரையும் மலர்ப் படுக்கையில் தள்ளியவன் - கில்ஜி!..

அலாவுதீன் கில்ஜி மீண்டும் வெறி கொண்டு 
ரந்தம்பூர் எனும் ராஜபுத்திர நாட்டின் மீது படையெடுத்தான்..

வெற்றிகரமாகத் தோல்வியைத் தழுவும் நேரத்தில்
மன்னன் அமிர்தேவனின் மந்திரிகள் நாட்டைக் காட்டிக் கொடுத்தனர்..

வீழ்ந்தான் அமிர்தேவன்.. 
அவனது ராணியும் தன் மானம் காக்க தீக்குளித்து மாண்டாள்..

தில்லி சுல்தானாக அமர்ந்த ஏழாண்டுகளுக்குள்
எத்தனை எத்தனையோ கொடுமைகளை அரங்கேற்றி
குருதியில் குளித்து எழுந்த குரூரன் - கில்ஜி..

இத்தனை நடந்தும் வெறி அடங்காதவனாக
மீண்டும் படை திரட்டிக் கொண்டு சென்றான்..

ராஜபுத்திர நாடுகளுக்குள் வெல்ல முடியாதபடிக்கு
பெரும் கோட்டையுடன் விளங்கிய நாடு - மேவார்...

இந்நாட்டின் கோட்டை சித்தோர்கர் (Chittorgarh).. 
சித்தூர் கோட்டை எனவும் சொல்லப்படும்..

படை நடத்திச் சென்றதன் நோக்கம் - மேவாரைக் கைப்பற்றுவதல்ல..

அந்த நாட்டின் மகாராணி பத்மினியைக் கவர்ந்திட வேண்டும்!..

மேவார் நாட்டின் அரசன் ரத்தன் சிங்..

ரத்தன் சிங்கின் மனைவி தான் பத்மினி..



பத்மாவதி என்றும் பெயர் கொண்ட
ராணி பத்மினி ஈடு இணையற்ற பேரழகி!...

ஆயிரம் தாமரைகள் கூடி நின்றாலும்
அவளுடைய அழகுக்கு நிகர் அவளே!..

இந்த விஷயத்தை அப்படி இப்படியாகக் கேள்விப்பட்ட கில்ஜி
கிறுகிறுத்துப் போனான்...

மேவார் நாட்டை நோக்கி
அலாவுதீன் கில்ஜி தனது படையை நடத்திய நாள் - 28 ஜனவரி 1303..

மேவார் நாட்டின் சித்தோர்கர் கோட்டை முற்றுகையிடப்பட்டது..

சில நாட்களிலேயே தெரிந்து போனது -
இரும்புக் கோட்டையை ஈக்களால் தகர்க்கமுடியாதென்று...

நம்பிக்கையான ஒருவனைத் தூதனாக அனுப்பினான்..

நட்பு நாடி வருகின்றேன்..
இந்நாட்டின் மகாராணியை ஒருமுறை பார்க்க வேண்டும்!.. - என்று..

முற்றுகை நீடிப்பதை விரும்பாத மன்னன்
கில்ஜியின் வார்த்தைகளை நம்பி விட்டான்.. இருப்பினும் -

எங்கள் மரபின்படி - அந்நிய ஆடவர் முன்பாக பெண்கள் வரமாட்டார்கள்..
எனவே நிலைக்கண்ணாடி ஒன்றில் ராணியைக் காணலாம்.. - என்று செய்தி அனுப்பினான்..

அதற்கு உடன்பட்ட கில்ஜி இரண்டு வீரர்களுடன் கோட்டைக்குள் நுழைந்தான்..

கில்ஜியை அன்புடன் வரவேற்றான் - மன்னன்.. 

சற்று நேரத்தில் நிலைக் கண்ணாடியில் 
முக மறைப்புடன் தென்பட்டாள் - ராணி பத்மினி...



அந்த சில விநாடிகளுக்குள் கில்ஜி மனதில் வேறொன்றைக் கணக்கிட்டான்..

நல்லது நண்பரே.. நான் உங்கள் அரண்மனைக்கு வந்ததைப் போல
தாங்களும் எனது பாசறைக்கு வந்து சிறப்பிக்க வேண்டும்!..

வஞ்சகமறியாத மன்னன் கில்ஜியுடன் அவனது பாசறைக்குச் சென்றான்...

கபடமே உருவான கில்ஜி - மன்னனைச் சிறைப் பிடித்து காவலில் வைத்தான்..
அத்துடன் அரண்மனைக்கும் சேதி ஒன்றினை அனுப்பினான்..

மன்னனை விடுவிக்க வேண்டும் எனில்
ராணி பத்மினி உடனடியாக இங்கே வரவேண்டும்.. 
இல்லையேல் நடப்பதே வேறு!.. - என்று...

அந்த ஓலையைக் கண்டதும் 
அரண்மனையிலிருந்து ஒரு ஓலை கில்ஜிக்குச் சென்றது..

மன்னனைக் காக்கும் பொருட்டு மகாராணியார் 
தனது சேடிப் பெண்கள் புடை சூழ - எழுபது பல்லக்குகளில்
ஆரோகணித்து நாளை காலையில் - அவ்விடம் வருவார்கள்!..
நிபந்தனையின்படி மன்னனை விடுவிக்க வேண்டும்!...

ஓலையினைக் கண்டதும் தேன் குடித்த மாதிரி இருந்தது - கில்ஜிக்கு..

எவ்வித சோதனையும் இன்றி - கோட்டையிலிருந்து வரும்
பல்லக்குகளை உள்ளே அனுமதிக்க ஆணையிட்டான்.. 

மறுநாள் காலையில் - சித்தூர் கோட்டையிலிருந்து புறப்பட்ட
எழுபது பல்லக்குகளும் கில்ஜியின் பாசறையை அடைந்தன..

உற்சாகம் மிகுத்துக் கிடந்த கில்ஜியை அந்த செய்தி ஈட்டியைப் போல தாக்கியது..

எதிர்பார்த்தபடி பல்லக்குகளில் பெண்கள் எவரும் வரவில்லை..
கை தேர்ந்த மாவீரர்கள் பலர் ஆயுதங்களுடன் வந்து 
சிறையில் இருந்த மன்னனை மீட்டுக் கொண்டு சென்று விட்டார்கள்...

தடுக்க முயன்ற கைகலப்பில் இருதரப்பிலும் உயிர்ச் சேதம்..
ஆனாலும் மன்னனை மறுபடியும் பிடிக்க முடியவில்லை...

பைத்தியம் பிடித்த குரங்கைத் தேள் கொட்டியது என்பார்கள்..

அந்த நிலைக்கு ஆளானான் அலாவுதீன் கில்ஜி... 

கொலை வெறியுடன் கொடூரத் தாக்குதலில் இறங்கினான்...

அடுத்த சில நாட்களில் கோட்டையின் நீர்நிலைகள் உட்பட
பல பகுதிகளையும் பாழாக்கினான்...

அறநெறி ஒன்றினையே கைக்கொண்டிருந்த 
பாரதத்தின் ராஜபுத்திரர்கள் - 
மூர்க்கர்களின் கொடூரத்தின் முன்பாகத் தடுமாறினார்கள்..

இனியும் தாக்குப் பிடிக்க முடியாது எனத் தோன்றியது...

வருவதை எதிர்கொள்ளத் துணிந்தனர்...

ஜௌஹர் எனும் தீக்குளிப்பு விழா எடுக்கப்பட்டது..



அன்று மாலை கோட்டையிலிருந்த பெண்கள் மங்கல நீராடி -
மஞ்சள் குங்குமம் மாலையுடன் புத்தாடை அணிந்தார்கள்..

மாதா ஸ்ரீ பவானியின் கோயிலில் வழிபாடும் 
மகிழ்ச்சியுமாகக் கழிந்தது - முழு இரவும்..

விடியற்காலை நேரம்...

ஸ்ரீ பவானியின் கோயிலில் வழிபாடு செய்த பின் 
அங்கிருந்த விளக்கிலிருந்து திரி ஒன்று எடுக்கப்பட்டு
அக்னிக் குண்டத்திற்குள் இடப்பட்டது..

கற்பூரம் குங்கிலியம் மாஞ்சருகு முதலான பொருட்களால் நிரப்பட்டிருந்த குண்டம் கனன்று எழுந்தது...

பூரண பொற்கும்பம் தாங்கியவளாக 
மகராணி ஸ்ரீமதி பத்மினி முன் நடந்து குண்டத்தினுள் கலந்தாள்..



மகராணி ஸ்ரீமதி பத்மினியைத் தொடர்ந்து ரத்தன் சிங்கின் 
இளைய ராணியான நாகமதி அக்னியில் இறங்கினாள்..

அவர்களைத் தொடர்ந்து -
ஆரவாரத்துடன் தீக்குள் இறங்கியவர்கள் பல்லாயிரம் பேர்...

பொழுது விடிந்து விட்டது...

சிவப்பு ஆடையுடன் வெளிப்பட்ட வீரர்கள்
துளசி தீர்த்தத்தை அருந்தினர்..
அக்னி குண்டத்தில் கரிந்து கிடந்த சாம்பலை 
நெற்றியில் பூசிக் கொண்டனர்...

ஜெய் பவானீ!..

வீர முழக்கத்தினால் கோட்டைச் சுவர்கள் அதிர்ந்தன..
பெரிய வெடி சப்தத்துடன் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டன...

முடிந்த மட்டும் தங்களது வாளால் எதிரிகளைத் துண்டாடினர்..
இயலாத நிலையில் தங்களது கழுத்தையே வாளுக்கு இரையாக்கினர்..

ஒற்றையாகப் போராடிக் கொண்டிருந்த 
மன்னனின் வாளும் இறுதியாக வீழ்ந்தது...

காற்றில் பெரும் புகையும் நிண வாடையும் பரவி நின்றது..

நிலைமையை யூகித்துக் கொண்ட கில்ஜி 
அரண்மனையின் உள்ளே ஓடினான்..

ராணி பத்மினியை எப்படியாவது கைப்பற்றி விடவேண்டும்!.. - என்று.. 

அவனைத் தொடர்ந்து அவனுடைய முரட்டுக் கும்பலும் ஓடியது..

தீக்கங்குகளுடன் கனன்று கொண்டிருந்தது அக்னிக் குண்டம்..

செந்நிறத் தீச்சுவாலைகள் இன்னும் எரிந்து கொண்டிருந்தன..

பொன் வெள்ளி தாமிரம் முதலானவை உருகிக் கிடக்க - முத்து ரத்தினம் மாணிக்க வைர வைடூரியங்கள் வெடித்துச் சிதறிக் கிடந்தன...

அவற்றையும் மீறியதாக -
இரத்தமும் நிணமும் எலும்பும் சதையும் 
வெந்து குழைந்து வழியெங்கும் வழிந்து கிடந்தன..

தவறி விட்டேன்.. அழகு ஓவியத்தைத் தவற விட்டேன்..
என்ன ஒரு மரபு.. என்ன ஒரு மானம்.. என்ன ஒரு கலாச்சாரம்!..
அடங்க மாட்டேன்.. இதை அழிக்காமல் அடங்க மாட்டேன்!..

ஆக்ரோஷத்துடன் கத்தினான்...

வன்மமும் குரோதமும் பொங்கிப் பீறிட்டெழுந்தது..
தன் கையினால் தன் கையினையே குத்திக் கொண்டான்...

அவனைத் தொடர்ந்து வந்த 
கும்பலும் அவனைப் போலவே கத்தியது..
  ஆனாலும் அந்த எண்ணம் பலித்ததா!?..

அலாவுதீன் கில்ஜியும்
அவனைத் தொடர்ந்த ஆயிரம் ஆயிரமும்
பின்னும் ஆங்கில ஐரோப்பிய வல்லூறுகளும்
பலவகைகளிலும் முயன்று கொண்டு தான் இருக்கின்றன..

பாரதத்தின் கலையையும் கலாச்சாரத்தையும் 
சிதைத்து சீரழித்து விடவேண்டுமென்று!..

அவ்வப்போது ஆங்காங்கே சரிவுகள் ஏற்பட்டு சிதைந்தாலும்
தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் அமீபாவினைப் போல
பாரத மண்ணின் கலையும் கலாச்சாரமும் தங்களைத் தாங்களே
பொலிவுடன் புதுப்பித்துக் கொள்கின்றன...

இந்தப் பதிவின் தகவல்கள் 
விக்கி பீடியாவில் பெறப்பட்டவை



எங்கிருந்தோ ஒற்றை விளக்கின் ஒளி தெரிகின்றது..
நல்ல மனம் செல்வதற்கான வழி புரிகின்றது..

ஓம் சக்தி ஓம்.. 
***  

14 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    கில்ஜியின் வரலாறு இதுவரை முழுமையாக அறிந்ததில்லை பதிவு விறுவிப்பாக இருந்தாலும் முடிவு மனதை கலங்க வைத்தது

    கற்புக்காக உயிரை விட்ட மாதரசிகள் வாழ்ந்த நாட்டில் இன்று பெண்களே அலங்கோலமாக திரிவது வருத்தமானது.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு ஐயா
    அறியாத பல செய்திகள் அறிந்தேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. அழகான தமிழில் சந்தேகம் எழாதபடி கதை சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு. கதையாக படித்து இருக்கிறேன், சினிமா பார்த்து இருக்கிறேன்.

    பாடத்திலும் படித்து இருக்கிறேன்.

    வரலாறை விருப்பபாடமாய் எடுத்த போது ஆல்பம் தயார் செய்தேன், யாருக்கு பின் யார் ஆண்டார்கள் வரிசையில் சாட் வரைந்து படங்கள் ஒட்டி ருப்பேன் அதில் சித்தூர் கோட்டை படம் ஒட்டி இருக்கிறேன்.ஒரு பதிவில் அதை போட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. வரலாற்று நிகழ்வினை உங்களது பாணியில் பகிர்ந்த விதம் அருமையாக இருந்தது. உண்மையறியாமல், உணர்வுக்கு மட்டுமே இடம் கொடுத்து தம்மையே ஏமாற்றிக்கொள்வதோடு பிறரையும் தவறான பாதைக்கு இட்டுச்செல்வோரை நினைக்கும்போது வேதனைதான் மேலிடுகிறது. இக்காலகட்டத்திற்குத் தேவையான பதிவு. இப்பதிவுக்கு ஏதேனும் தடை வராமல் இருந்தால் சரி.

    பதிலளிநீக்கு
  6. துரை செல்வராஜு சார்.... படித்தேன். மீண்டும் வருகிறேன்.

    நம்மால் ரஜபுதன மேவார் வீர்ர்களின் வீரத்தைக் கண்டு ஆச்சரியமும் பெருமிதமும் அடைய நினைக்காமல் இருக்கலாம். தம்தம் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டி மானத்துக்காக உயிர் துறந்த எண்ணற்ற அரசகுல மகளிரைப் போற்ற மனமில்லாமல் இருக்கலாம். ஆனால் வரலாற்றைத் திரிப்பது, எள்ளி நகையாடுவது, கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுவது என்பது எத்தர்களின் குணம்.

    விக்கிபீடியாவின் தகவல்களை வைத்துக்கொண்டு நல்ல நடையில் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. எப்போதோ படித்த மனம் வெம்பும் வரலாற்றினைமிக மிக அழகாக தெள்ளிய தமிழில்
    இனிய தமிழில், நீங்கள் எழுதொட அதை மீண்டும் வாசித்து நினைவுபடுத்திக் கொள்ளமுடிந்தது...சிறப்பான பதிவு..

    கீதா: அதே கருத்துடன், பார்க்அபோனால் வட இந்தியா தான் இப்படியான தாக்குதல்களுக்கு அதிகம் உட்பட்டது. .அதனால் தான் அதன் தாக்கங்கள் பல வருடங்கள் கடந்தும், பல தலை முறைகள் கடந்தும், காந்தி காலம் வரை சத்தும்.இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று தோன்றுவதுண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன் - அதனால் விளைந்த ஒரு நன்மையும் இருக்கிறது. வடக்கே தங்கத்தின்மேல் மோகம் குறைவு, தங்க நகைகளை அணிவதும் குறைவு. நகைக்காக கொள்ளை, கொலை தமிழ்நாட்டில் மிக அதிகம்.

      நீக்கு
  8. இப்படி ஒரு வரலாற்றுச் சம்பவமோ... இப்போதான் பல விசயங்கள் அறிகிறேன்.

    ///கில்ஜி/ / ஒரு கணம் ஷாக்ட் ஆகிட்டேன்:) நல்லவேளை இது மூன்றெழுத்து:).

    பதிலளிநீக்கு
  9. மிகச் சிறப்பான பதிவு. 88 ஆம் வருடம் சிதோட்கட் சென்று நேரில் இந்த இடங்களைப் பார்த்திருக்கோம். பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. எது எப்படியோ பத்மாவதி தயாரிப்பாளர்களின் எண்ணம் நிறைவேறி விட்டாற்போல் தெரிகிறது! :( என்ன செய்ய முடியும்! நேரில் பார்த்து மெய் சிலிர்த்துப் போனோம். உதயபூர் கோட்டையிலும் மீரா பாய் தன் கைகளால் எழுதிய ஓலைச்சுவடிகளைக் காணலாம்.

    பதிலளிநீக்கு
  11. துவக்கத்தில் எழுதி இருக்கும் கவிதை அருமை!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..