நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 10, 2017

மார்கழிப் பூக்கள் 26

தமிழமுதம்

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை..(656) 
***
சமணத் துறவியர் அருளிய
நாலடியார்

- நன்றியில் செல்வம் -

அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேற் கைநீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவு டையார்..(262)   
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 26


மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப்பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிய
திருப்பாசுரம்

ஸ்ரீ பார்த்தசாரதி - திருஅல்லிக்கேணி
என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பொழியா நீர்மையால் வென்றி
அடலாழி கொண்ட அறிவனே இன்பக்
கடலாழி நீயருளிக் காண்..(2236) 

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
திருத்தலங்கள்

புண்ணிய பாரதத்தில் தான்
எத்தனை எத்தனை திருக்கோயில்கள்!..

அதுவும் குறிப்பாக
கன்னித் தமிழகத்தில்!..

அவற்றுள்,
அம்பிகை வழிபட்ட திருத்தலங்கள்
விநாயகனும் வேலவனும் வழிபட்ட திருத்தலங்கள்
நான்முகனும் நாரணனும் வழிபட்ட திருத்தலங்கள் 
தேவர்கள் கந்தர்வர்கள் வழிபட்ட திருத்தலங்கள்
மகரிஷிகள் சித்தர்கள் மன்னர்கள் வழிபட்ட திருத்தலங்கள்..
என்பதாக கண்முன்னே பரந்து திகழ்கின்றன..

இவற்றினூடாக
எறும்பு முதலாக யானை வரையான எளிய சிற்றினங்கள்
வழிபட்டு உய்வடைந்த திருத்தலங்களும்
சிறப்பாக சொல்லப்படுகின்றன..

மார்கழியின் இளங்காலைப் பொழுதில்
ஈசன் திருநடமிடும் பஞ்ச சபை எனும் திருத்தலங்கள்
ஈசன் தானாகி அமர்ந்த பஞ்ச பூத திருத்தலங்கள்
எம்பெருமானின் வீரட்டானத் திருத்தலங்கள்
எம்பெருமானின் சப்த விடங்கத் திருத்தலங்கள்
என, இருபத்தைந்து திருக்கோயில்களைத் 
தரிசனம் செய்த நிலையில்

சிற்றுயிர்களும் நல்லறிவு கொண்டு
வணங்கித் துதித்த தலங்கள்
சிலவற்றைத் தொடரும் பதிவுகளில்
தரிசனம் செய்வோம்..

நண்டு வழிபட்ட திருத்தலம்

திரு நண்டு தேவன் குடி
(திருந்து தேவங்குடி) 
நண்டாங்கோயில் 

ஸ்ரீ கற்கடேஸ்வரர்
இறைவன்
ஸ்ரீ கற்கடேஸ்வரர் 

அம்பிகை
அருமருந்து நாயகி, அபூர்வ நாயகி 

தீர்த்தம் - சந்திர தீர்த்தம்
தலவிருட்சம் - பெரியா நங்கை 

அசுரர்களை அழிப்பதற்கு மேலும் வல்லமையை வேண்டிய
தேவேந்திரன் அதற்கான வழிமுறையைத் தேடினான்..

தாமரைக் குளக்கரையில் முளைத்திருக்கும்
சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து
ஆயிரத்தெட்டு தாமரை மலர்களால்
வழிபடுமாறு தேவகுருவாகிய பிரகஸ்பதி அறிவுறுத்தினார்..

திருவிடைமருதூருக்கு வடக்கே காவிரியின் வடகரையில்

தாமரைக் குளக்கரையில் முளைத்திருக்கும்
சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்தான் - தேவேந்திரன்..

தொடர்ந்து மலர்களைக் கொண்டு வழிபாடு செய்யும்போது
ஒரு மலர் குறைவதை உணர்ந்தான்..

ஒவ்வொரு நாளும் இவ்வாறு நிகழ்ந்திட - 
அதனைக் கண்டறிந்து களைவதற்கு முற்பட்டான்..

அவனது தேடலில் கிடைத்தது - நண்டு!..



தான் வழிபாடு செய்யும் பூக்களில் ஒன்றை
நண்டு எடுத்துக் கொண்டு - சிவலிங்கத்தின் திருமேனியில்
சாத்துவதைக் கண்ணுற்ற தேவேந்திரன்
கோபாவேசமானான்..

சிற்றுயிரின் மீது இரக்கம் கொள்ளாமல்
வாளெடுத்து வீசினான்..

பதற்றமடைந்த நண்டு 
சிவலிங்கத்தின் ஊர்ந்தது..

ஆத்திரத்தால் அறிவிழந்த தேவேந்திரனின் வாள்
சிவலிங்கத்தின் மீது இரு தடங்களை உண்டாக்கியது..

நண்டுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை..

இதைக் கண்ணுற்றும் சிந்திக்காத தேவேந்திரன்
நண்டைத் துண்டாக்கிட வேண்டுமென
மீண்டும் வாளை ஓச்சினான்..

அப்போது
சிவலிங்கத்தின்
திருமுடியிலிருந்தது
நண்டு..

அவ்வேளையில் 
சிவலிங்கத்தின் உச்சியில் 
துளை ஒன்று ஏற்பட 
அதனுள் சென்று ஐக்கியமாகியது..

இதைக் கண்டு பதறிய தேவேந்திரன்
பரமனின் திருப்பாதங்களில் விழுந்து கதறினான்...

தேவேந்திரனின் முன் எழுந்தருளினார் ஈசன்..

துர்வாச முனிவரை எள்ளி நகையாடியதால்
நண்டாக சாபம் பெற்ற கந்தர்வன் இவன்..
இவனது அன்பு மிகவும் உயர்வானது!..
என்றருளினார்..

சிற்றுயிராகிய நண்டின் மீது இரக்கம் கொள்ளாமல்
கொலை வெறித் தாக்குதல் நடத்திய தேவேந்திரன்
தலைகுனிந்து நின்றான்..

தான் செய்த வழிபாடு அரைகுறையாகிப் போனது..
இந்த நேரத்தில் தனக்கு வரம் வேண்டும்!.. - எனக் கேட்டால்
ஏடாகூடமாகிவிடும் என்று உணர்ந்து 
பிழைபொறுத்தருள வேண்டிக் கொண்டதோடு,
தம்மை மீண்டும் வழிபட அனுமதிக்க வேண்டும்!.. 
என, வேண்டிக் கொண்டான்..

ஈசனும் புன்னகையுடன் அனுமதித்து
திருத்தலம் ஒன்றினை அடையாளங் காட்டினார்..

அந்தத் திருத்தலத்தில் தேவேந்திரன் 
தனது வழிபாட்டினைத் தொடர்ந்தான்..

சிறப்புமிகும் அந்தத் திருத்தலம் எது!?..

நாளைய பதிவில் காண்போம்..
***



கற்கடம் என்றால் நண்டு..

நண்டு வழிபட அதற்கு அருள்பாலித்ததால்
ஈசனின் திருப்பெயர் ஸ்ரீ கற்கடேஸ்வரர்..

இப்படி நண்டு வழிபட்டு உய்வடைந்த திருத்தலம்
இன்றைக்கு நண்டாங்கோயில் என வழங்கப்படுகின்றது..

திருந்து தேவன்குடி எனப்பட்ட ஊர் 
கால வெள்ளத்தில் அழிந்து போனது..

திருக்கோயில் மட்டுமே வயல்வெளிகளுக்கு
மத்தியில் மூன்று புறமும் 
தாமரை நிறைந்த அகழியின் நடுவில்
விளங்குகின்றது..

திருக்கோயிலைச் சுற்றி அமைந்துள்ள அகழி
நவபாஷாண தீர்த்தம் என வழங்கப்படுகின்றது.. 

அம்பிகை இரு சந்நிதிகளில் குடிகொண்டிருக்கின்றாள்..
அம்பிகைக்கு அபிஷேகம் செய்யப்பெற்ற நல்லெண்ணெய்
அருமருந்தாகின்றது என்கின்றனர்..

ஒரே நிறமுடைய பசுக்களின் பால் 10 கலம் கொண்டு 
அபிஷேகம்செய்யும் போது சிவலிங்கத்தின் திருமுடியில்
பொன் நண்டு ஒன்று தோன்றும் என்பது ஐதீகம்..

இந்த செய்தியை முப்பதாண்டுகளுக்கு முன்
படித்திருந்தாலும் இப்போது மீண்டும் பிரமிப்பில் 
திளைக்கின்றேன்..

பசும்பால் 10 கலம் என்றும் 21 கலம் என்றும்
இருவேறு திருக்குறிப்புகள் காணக் கிடைக்கின்றன..



நினைத்தபோதில் இத்திருக்கோயிலுக்கு
எவரும் சென்றுவிட இயலாது..

கால நேரம் கூடி வந்தால் மட்டுமே
சிவதரிசனம் எய்தும்!.. என்பது திருக்குறிப்பு..

கும்பகோணத்திலிருந்து வேப்பத்தூர் 
செல்லும் நகரப் பேருந்தில் சென்று
திருவிசநல்லூர் கிராமத்தில் இறங்கிக் கொள்ளவும்..

அங்கிருந்து வடக்காக 2 கி.மீ தொலைவில் உள்ளது
கற்கடேஸ்வரர் திருக்கோயில்...

இந்த திருவிசநல்லூரில் தான்
கார்த்திகை அமாவாசை நாளில்
வீட்டுக் கிணற்றுக்குள் கங்கையை வரவழைத்த
மகான் ஸ்ரீஸ்ரீதர ஐயாவாள் ஸ்வாமிகளின் இல்லம் உள்ளது..

 நண்டு வழிபட்ட இத்தலத்திற்கு 
ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான்
அருளியுள்ள திருக்கடைக் காப்பு 

மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்இவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே!..(3/25) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
17 - 18

ஸ்ரீ உத்வாகநாதர் - திருமணஞ்சேரி
செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாகக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்!..

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்!...
***

தேவி தரிசனம்
ஸ்ரீ துர்காம்பிகை - பட்டீஸ்வரம்..


உடையாளை ஒல்குசெம்பட்டு உடையாளை ஒளிர்மதிச்செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னையினிப் 
படையாளை உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே..(84)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

5 கருத்துகள்:

  1. நன்றி ஐயா
    மார்கழி மணம் தொடரட்டும் ஐயா

    பதிலளிநீக்கு
  2. அறியாத பல தலங்கள் அறிந்து கொள்ள முடிகிறது...

    அருமை ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. எறும்பு வழிபட்ட திருவெறும்பூர் இருக்குமோ என்று தேடினேன்

    பதிலளிநீக்கு
  4. சிறப்பானதோர் ஆலயம் பற்றி தெரிந்து கொண்டேன்..... நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..