நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 04, 2016

இனிய குடும்பம்

அக்கா... அக்காவ்!...

வாம்மா.. தாமரை!.. வாங்க.. வாங்க... என்னங்க!...

.... .... ....

என்னங்க.. உங்களத் தானே.. அந்தக் கம்ப்யூட்டருக்குள்ள நுழைஞ்சிட்டா.. அக்கம் பக்கம்.. அதிர் வேட்டு போட்டாலும் கேக்காது!... என்னங்க!..

இதோ.. வந்துட்டேன்!... வாங்க.. வாங்க... வாம்மா.. தாமரை!.. மாப்பிள்ளையும் பொண்ணுமா!... இப்ப தான் வரணும்..ன்னு இருந்திருக்கு!..

வணக்கம்... அண்ணாச்சி... வணக்கம் மதனி!...

வணக்கம் தம்பி... செல்வி.. என்ன பாத்துக்கிட்டு .. போய் ஆரத்தி கரைச்சி எடுத்துக்கிட்டு வா..

அட... ஆமால்ல!.. நானும் மறந்தே போய்ட்டேன்...


தாமரை
அக்காவும் அத்தானும் ரொம்பவே பழமையில ஊறினவங்க!.. அதுக்குன்னு.. மூட நம்பிக்கை... எல்லாம் இல்லை... நம்ம கலாச்சாரத்தை மறக்காதவங்க!...

தாமரை.. நீயும் மாப்பிள்ளையும் சேர்ந்து கிழக்கு பார்த்து நில்லுங்க!..

தீர்க்காயுசா.. தீர்க்க சுமங்கலியா.. பதினாறும் பெத்து நீடூழி வாழணும்.. ஆத்தா.. பத்ரகாளி!.. புள்ளைங்க தலைமாட்டுல நின்னு என்னைக்கும் நல்லபடியா வாழ வைக்கவேணும்!...

வாங்க.. வீட்டுக்குள்ள வாங்க!..

அத்தான்... பிள்ளைகளைக் காணோம்!.

அவங்களுக்குத் தான் பள்ளிக் கூடம் திறந்தாச்சே!.. எங்க காலேஜ் ஆகஸ்ட் வாக்கில திறப்பாங்க!...

என்னம்மா!.. தாமரை .. சொல்லிக்கிட்டு இருந்த மாதிரியே சித்திரைல பத்ரகாளியம்மன் பொங்கலுக்கு அத்தான் வந்துட்டாங்க!.. சந்தோஷம்.. இப்பதான் உன் முகங்கூட செழிப்பா இருக்கு!.. ஏதும் நல்ல சேதி உண்டா அவ்விடத்தில!...

போங்கக்கா!... அப்படி ஒன்னும் தெரியலே!...

ஏ.. நீ வேற!..அந்தக் காலம் மாதிரியா?.. அதுங்களுக்கு எல்லாம் திட்டமிட்ட வாழ்க்கை..ன்னா என்னன்னு தெரியும்.. நொய்... நொய்..ன்னு குடையாதே!...

ம்.. உங்களுக்கு என்னா.. எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்!...

ஏன்... அத்தான்!... அந்த காலம்..ன்னா என்ன?.. நீங்க ஏதும் தெரியாமலா இருந்தீங்க!.. அக்காவுக்கு குஞ்சம் வாங்கிக் கொடுத்துட்டு கிளித் தோப்புல சுத்திச் சுத்தி வந்தீங்களா இல்லையா!..

அதெல்லாம் சொல்லியாச்சா!... அன்னைக்கு குஞ்சம் வாங்கிக் கொடுத்தது தான் பெரிய தப்பாப் போச்சு!...

கேட்டியா.. தாமரை!.. ஆசைக்கு ஒன்னு.. ஆஸ்திக்கு ஒன்னு... ன்னு பெத்ததுக்கு அப்புறம் பேச்சைப் பார்த்தாயா?...

நல்லாயிருக்கு வேடிக்கை.. வீட்டுக்கு வந்த விருந்தாளிங்களைக் கவனிக்காம!..

ஆமாமா.. நம்ம ரகளைய இன்னொரு நாளைக்கு வெச்சுக்கலாம்!...

அப்புறம் தம்பி!.. அபுதாபி..ல என்ன வேலை பார்க்கிறீங்க?.. தாமரைய அழைத்துக் கொண்டு போகலாம் தானே!..

டவுன் பிளானிங்..ல புராஜக்ட் மேனேஜர்... ஆனா.. அடிக்கடி இடம் மாறிக்கிட்டே இருக்கும்... அது கொஞ்சம் சிரமம்... புது ஏரியாவுக்குப் போனா திரும்பி வர்றதுக்கு ஒரு வாரம் கூட ஆகும்.. அதோட இப்போ அங்கே எல்லாம் நம்ம ஊரு மாதிரி வீட்டு வாடகை விலைவாசி எல்லாம் ஏகத்துக்கும் ஏறிப் போச்சு.. அடுத்த வருஷம் அங்கே அழைத்துக் கொள்ளலாம்.. ந்னு ஒரு யோசனை இருக்கு!...

 கேட்டீங்களா.. அக்கா!.. அதுக்கும் புராஜக்ட் தானாம்!...

என்ன செய்றது தாமரை.. பொண்ணாப் பொறந்தாலேயே இதையெல்லாம் தாங்கிக்கத் தான் வேணும்!..

அபுதாபி.. ன்னா.. அங்கே தான நம்ம தேவகோட்டை கில்லர் ஜி.. மனசு குமார் எல்லாம் இருக்காங்க!...



ஆமாமா... அவங்கள எல்லாம் பார்த்து இருக்கேன்.. கில்லர் ஜி அவங்களோட மீசைக்கு..ன்னு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கு!.. இப்ப கூட பாருங்க.. லண்டனுக்குப் போயி செம கலாட்டா பண்ணியிருக்கார்!... அவரு கூட இருந்தா பொழுது போறதே தெரியாது!...

நிஜந்தான்.. பாலை வனத்திலயும் ஒரு சோலை வனம் வேணுமில்லையா!...

சோலை வனம்.. ந்னதும் நினைவுக்கு வர்றது.. தஞ்சையம்பதி..ன்னு ஒருத்தர்.. 

ஆமா.. கோயில்.. குளம்.. திருவிழா..ன்னு எழுதிக்கிட்டு இருப்பார்!. வேற வேலை எதுவும் இல்லாம!..

அவரு கூட.. சோலைவனச் சுற்றுலா..அப்படின்னு அபுதாபியைப் பத்தி... ரெண்டு பதிவு போட்டார்.. அத்தோட சரி!.. மறுபடி எதையும் காணோம்!...

போடுவார்... போடுவார்... போடாம எங்க போகப் போறார்?...

சரி.. காஃபி எடுத்துக்கங்க!..

தஞ்சாவூர் டிகிரி காஃபியா!...

அப்படின்னு சொல்லிக்க வேண்டியது தான்!.. அதெல்லாம் கறந்த பால்ல... போடணும்... இது சும்மா ஐஸ் பால்..ல போட்டது.. 

இது முந்திரி பகோடா.. இது சந்திர கலா...

சந்திர கலா...வா!...

ஆமா... இது தஞ்சாவூர் ஸ்பெஷல்.... தஞ்சாவூர் அசோகா மாதிரி இதுவும் இங்கே சிறப்பு...  இதெல்லாம் கடையில வாங்கினது.. கைப்பக்குவமா செஞ்சா .. அமிர்தம் .. தேவாமிர்தம் தான்!...

நீங்க விடுமுறையில எங்கெல்லாம் போயிருந்தீங்க!...

சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவுக்குத் தானே முக்கியமா வந்தது... பத்து நாள் திருவிழாவையும் பார்த்தோம்.. அப்படியே மறக்காம வாக்களித்தோம்..

சிவகாசி தானே பூர்வீகம் உங்களுக்கு!...

ஆமாம்.. இன்னும் எங்க வீட்டுக்கு பெரிய ஐயா தான் எல்லாமே.. ஆறு தலைக் கட்டு... பங்களா வாசல் வீடு..ன்னா... எல்லாருக்கும் தெரியும்!..  அவங்களுக்கு அந்தக் காலத்திலேயே பர்மா தேக்கு வியாபாரம்!... அசராத உழைப்பு.. தனி ஒரு ஆளா நின்னு நெறைய கோயில்களுக்கு திருப்பணி செஞ்சிருக்காங்க!..

ஆயிரம் இருந்தாலும் அந்த கால மனுஷங்களுக்கு ஈடு இணையா யாரையும் சொல்ல முடியாது!...

தாமரை..  பத்ர காளியம்மன் கோயில் திருவிழா..ல எடுத்த படங்களைக் காட்டு!..

அடடே.. கையோட கொண்டு வந்திருக்கீங்களா!...

தாமரை!..

என்னங்க அக்கா!..

அவங்க பார்த்துக்கிட்டு இருக்கட்டும்.. நீ கொஞ்சம் உள்ளே.. வா!...



















படங்களை வழங்கிய
சிவகாசி செய்திகள் தளத்திற்கு மனமார்ந்த நன்றி

அத்தான்.. படங்கள் எல்லாம் எப்படி!... 


திருவிழாவை நேரில் தரிசித்த மகிழ்ச்சியம்மா.. தாமரை!..

சரி.. அக்கா... அத்தான் நாங்க புறப்படுகின்றோம்..

தம்பி... உங்களுக்கு இன்னும் எத்தனை நாள் லீவு பாக்கி இருக்கின்றது?

இன்னும் பதினைஞ்சு நாள்!...

சரி.. அதுக்குள்ள ஒரு நாளைக்கு நம்ம வீட்டுல.. சின்ன விருந்து.. உங்களுக்காக!..

ஆகட்டும்.. அண்ணாச்சி!.. அவசியம் வருகின்றோம்... இது.. இது.. உங்களுக்காக வாங்கி வந்தது!...

என்னது இதெல்லாம்!... ஓலைப் பெட்டிக்குள்ள - கருப்பட்டி.. பனஞ்சீனி பணியாரம், சுற்று முறுக்கு, கோயில்பட்டி கடலை மிட்டாய்... ஆகா!..

இனிமே.. உங்க அண்ணாச்சிய கையில பிடிக்க முடியாது!.. பாரம்பரியம்... கலாச்சாரம்...ன்னு தன்னையே மறந்துடுவாங்க!..

இது பிள்ளைகளுக்கு.. ஆளுக்கு ஒரு கால்குலேட்டர்...

எங்களை ரொம்பவும் கட்டுக்குள்ள கொண்டாந்துட்டீங்க!...

உங்க அன்புக்கு முன்னால இதெல்லாம் எம்மாத்திரம்!... நாங்க தான் கட்டுப்பட்டு நிற்கிறோம்!...

சந்தோஷம் ஐயா!.. ரொம்ப சந்தோஷம்!..  தாமரை!.. உங்க அக்கா.. உனக்கு என்ன சொல்லி கொடுத்திருப்பாங்க..ன்னு எனக்கு தெரியும்!.. எல்லாத்தையும் மனசுல வெச்சிக்கணும்... மனை மங்கலம்.. அது தான் முக்கியம்!..

ஆகட்டும் அத்தான்!... நாங்க புறப்படுகின்றோம்!...

சரிம்மா... வர்ற ஞாயிறன்னைக்கு வேற எதும் வேலை இல்லையே!.. காலையிலேயே வந்து விடுங்கள்... ஐயா அம்மாவையும் கூட்டி வாருங்கள்.. ஒரு நாள் பொழுது நம்ம வீட்டுல சந்தோஷமா இருக்கட்டும்!...

ஆகட்டும் அண்ணாச்சி!.. வர்றோம் மதனி!..

சரி.. தம்பி.. நல்லபடியா புறப்படுங்க!.. தாமரை.. குங்குமம் வைத்துக் கொள்.. நான் சொன்னதை மறந்துடாதே... என்ன!...

சரிங்க அக்கா!...


தீர்க்க சுமங்கலி வாழ்கவே..
அவள் திருமுக மங்கலம் வாழ்கவே!..
காக்கும் தேவதை வாழ்கவே
அவள் காவலில் நல்லறம் வாழ்கவே!.. 
* * *

12 கருத்துகள்:

  1. பத்ரகாளியம்மன் கோயில் விழா படங்கள் அருமை. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் விவாதத்தோடான பதிவுகள் தற்போது தங்கள் நடையில் அருமையாக வருவதைக் காணமுடிகிறது.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அருமையான பகிர்வு.... படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஆஹா பதிவில் நம்மைப்பற்றியும் வருகின்றதே...வழக்கம்போல கலகலப்பு, மத்தாப்பு சிரிப்பு நன்று ஜி
    சிவகாசி கோயில் திருவிழா படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதிவில் வருகிறவர்களில் கில்லர் ஜி மனசு குமார் தவிர மற்றவர்கள் கற்பனைப் பாத்திரங்களா இல்லை நிஜமான வர்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      கில்லர் ஜி , குமார் - ஆகியோர் தவிர, கற்பனை கதாபாத்திரங்களே!..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. தாமரை என்று ஒரு ஓவியம் இருப்பதால் வந்த சந்தேகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தாமரை எனும் கற்பனை கதாபாத்திரத்திற்கு ஏற்றதாக ஓவியர் மாருதி அவர்களின் ஓவியம் கிடைத்தது.. அதைத் தான் பதிவில் வைத்தேன்..

      தங்களின் மீள்வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. சிறுவயதில் சிவகாசியில் பத்ரகாளி அம்மன் திருவிழா பார்த்தது.இப்போது உங்கள் பதிவில் மீண்டும் பார்த்து மகிழ்ந்தேன்.
    உரையாடலில் எவ்வளவு விஷயங்கள் ! அருமை.
    வாழ்த்துக்கள்>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் மகிழ்வான கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..