நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 14, 2015

பிரதோஷம்

இன்று பிரதோஷம்!..

சமீபகாலமாக சிவாலயங்களில் நிகழ்வுறும் வைபவங்களுள் சிறப்பிடம் பெறுவது - பிரதோஷம்!..

அல்லல் அனைத்தையும் அகற்றுவது பிரதோஷ வழிபாடு - என அன்பர்கள் போற்றிக் கொண்டாடுகின்றனர்.


நாம் - நமது வாழ்வில் எத்தனை எத்தனையோ குற்றங்குறைகளைச் செய்து கொண்டேயிருக்கின்றோம்.. அதே சமயம் தெரிந்தோ தெரியாமலோ சில நன்மைகளையும் செய்து விடுகின்றோம்..

நன்மைகளுக்குப் பலன் கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும்,

இலகுவான குற்றங்கள் - இறைவன் சந்நிதியில் மன்னிக்கப்படுகின்றன. 

அவை மன்னிக்கப்படும் நேரம் தான் - பிரதோஷம் எனப்படும் மாலை நேரம். 

பிரதோஷம் எனில் குற்றமற்றது என்பர் சான்றோர்.

சமய நெறிமுறைகளில் - மாலை வேளையில் கோயிலுக்குச் செல்லும்படி வற்புறுத்தப்படுவது - அதனால் தான்!..

பிரதோஷ வேளையில் முப்பத்து முக்கோடி தேவரும் - நான்முகப் பிரம்மனும் ஸ்ரீ ஹரிபரந்தாமனும் சிவபெருமானை வணங்கி நிற்பதாக ஐதீகம்.


மூப்பும் சாக்காடும் இல்லாத வாழ்வினை விரும்பிய தேவர்கள் - அவர்களாகவே - பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க முனைந்தனர்.

முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது..

தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி - ஸ்ரீ ஹரிபரந்தாமன் ஆமை எனத் திருவுருவங்கொண்டு மந்தர மலையைத் தாங்கியருளினன்.

இந்த வைபவத்தைத் தான்,

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே..

- என்று சிறப்பித்து ஏத்துகின்றார் - இளங்கோவடிகள்.

இந்த இரண்டாவது முயற்சியின் முடிவில் - ஆலகால நஞ்சு தோன்றியது.

ஆலகாலத்தின் பிடியிலிருந்து தப்பிக்க - சிவபெருமானிடம் அடைக்கலமாகி நின்றனர்.

எம்பெருமான் - அந்த நஞ்சினை தாமே - தமது கண்டத்துள் அடக்கி ஆருயிர்களுக்கு அடைக்கலம் அளித்தார்.

நஞ்சுண்டதால் களைத்தவரைப் போல நடித்து - அண்டசராசரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி - பின் அதனின்று மீண்டாற்போல,

அம்பிகையுடன் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தி - அகில உலகங்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியருளினார்.


இந்த நிகழ்வினை - சைவ சமயக்குரவர்களான,

அப்பர் ஸ்வாமிகளும்,
திருஞான சம்பந்த மூர்த்தியும்,
சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளும்,
மாணிக்கவாசகப் பெருமானும் -
தேவார - திருவாசகத் திருமுறைகளில் பாடிப் பரவுகின்றனர்.

வடங்கெழு மலைமத்தாக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சங் கண்டு பல்தேவரஞ்சி
அடைந்து நும் சரணமென்ன அருள் பெரிதுடையராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே!.. (4/65)
அப்பர் ஸ்வாமிகள்.

பின்னரும் -

பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புண்ர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோண்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என்சென்னியதே!.. (5)

- என்று, அம்மையப்பனின் நித்ய கல்யாண சௌந்தர்யத்தினைப் போற்றிப் புகழ்ந்துரைக்கின்றார் - அபிராமபட்டர்.



அமாவாசை மற்றும் பௌர்ணமிக்குப் பின் - திரயோதசி எனும் பதின்மூன்றாம் நாள் தான் - பிரதோஷ நாள்.

தேய்பிறைச் சதுர்த்தி - சனிக்கிழமையன்று அன்று அமைந்தால்,
சனி மகாபிரதோஷம் என சிறப்புடன் அனுசரிக்கின்றனர்.

பிரதோஷ வேளை -  ஐந்து வகையாக குறிப்பிடப்படுகின்றது..

தினமும் மாலை வேளை -  நித்ய பிரதோஷம்.
வளர்பிறை (சுக்லபட்சம்) - பக்ஷ பிரதோஷம்.
தேய்பிறை (கிருஷ்ண பட்சம்)- மாத பிரதோஷம்.
தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை - மகா பிரதோஷம்.
சர்வமும் ஈசனிடம் ஒடுங்கும் காலம் - பிரளயப் பிரதோஷம்.


பிரதோஷ வேளையில் - நந்தியம்பெருமானுக்கு - நல்லெண்ணெய், திரவியம், பால், தயிர், பன்னீர், இளநீர், திருநீறு, பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள், சந்தனம் - ஆகிய மங்கலங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படும்.

இதேவேளையில் கருவறையில் - இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் நிகழும்.

புது வஸ்திரத்துடன் - மலர்மாலையும் அருகம்புல் மாலையும் சாற்றப்படும்.

மலர்களாலும் வில்வதளங்களாலும் அர்ச்சனை நிகழ்த்தப்படும்.

நிறைவாக இறைவனுக்கும் இறைவிக்கும் நந்திக்கும் ஏககாலத்தில் மகா தீப ஆராதனை நிகழும்.


பிரதோஷ வழிபாட்டில் உணர்த்தப்படுவது அன்பும் அடக்கமும் ஆகும்.

இறைவனின் எதிரில் அமர்ந்திருக்கும் தன்மையே - இதனை உணர்த்தும்.

சைவ சமயத்தில் முதற்குருவாக உணர்த்தப்பட்டவர் நந்தியம்பெருமான்.

அனைத்தையும் கற்றறிந்தவர் - நந்தியம்பெருமான். எண்ணாயிரங்கோடி முறை பஞ்சாட்சர மந்திரத்தினை ஜபித்தவர்.

எம்பெருமான் அம்பிகையுடன் ஏகதேசமாக வீற்றிருந்து உபதேசிக்கும் ஞானானந்த விஷயங்களை - அவர்களுடைய அனுமதியுடன் உலக நன்மைக்காக மற்ற மகரிஷிகளுக்கும் சித்தர்களுக்கும் உரைத்து அருள்பவர்.

பிரதோஷ வேளைகளில் - நந்தியம்பெருமானுக்கும் மூலஸ்தானத்தினுள் விளங்கும் சிவமூர்த்திக்கும் ஏக காலத்தில் தீபஆராதனை நிகழ்வதே சிறப்பு.

இந்த பிரதோஷ நாட்களில்  விரதம் அனுசரிப்பவர்களும் உள்ளனர்.

அதிகாலையில் எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட்டு, பகல் முழுவதும் உபவாசம் இருந்து  இயன்றவரை - தேவார திருமுறைகளைப் பயின்று பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று  வழிபடுதல் மரபாக உள்ளது.

பற்பல நன்மைகளை அளிப்பதால் பிரதோஷ வழிபாடுகளில் மக்கள் மிகுந்த நாட்டம் உடையவராக இருக்கின்றனர்.

சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடகாலத்திற்கு இறைவழிபாடு செய்த புண்ணியமும்,

சனிப் பிரதோஷத்தன்று வழிபட்டால் ஐந்து வருட காலத்திற்கு சிவவழிபாடு செய்த புண்ணியமும் கிடைக்கும் என்பது காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

அதிலும்,

நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே - சிவலிங்கத்தைக் கண்டு,
தரிசனம் செய்வது புண்ணியம் என்றும்,

நந்தியின் காதில் நமது கஷ்டங்களைச் சொன்னால் -
அவையெல்லாம் தீரும் - என்றும் சொல்லப்படுகின்றது..

இந்த வார்த்தைகளால் உந்தப்படுகின்ற பாமரர்கள் - நந்திக்குப் பின்னால் முட்டி மோதிக் கொள்வதை - சிவாலயங்களில் காணலாம்..

அவையெல்லாம் சாதாரணமாக - செய்யக்கூடியவை அல்ல!..

இப்படியெல்லாம் செய்வது சிவ அபராதம்.. - என்கின்றனர் ஆன்றோர்கள்.

சிவாலயத்தில் தரிசனம் செய்வதற்கே நிறைய விதிமுறைகள் உள்ளன.

அவைகளைப் பற்றி வேறொரு இனிய சந்தர்ப்பத்தில் பேசுவோம்..


பிரதோஷ காலத்தில்  அபிஷேக ஆராதனைகள் பூர்த்தியானவுடன் சந்திரசேகர மூர்த்தி அம்பிகையுடன் ரிஷப வாகனத்தில் ஆலய திருச்சுற்றினுள் வலம் வருவதைத் தரிசிக்கலாம்.

திரயோதசி நாளில் சூர்ய அஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும்  அஸ்தமனத்துக்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் - ஆக ஏழரை நாழிகைப் பொழுது தான் பிரதோஷம்.

ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள், எனில் மூன்றே முக்கால் நாழிகை என்பது 90 நிமிடங்கள் - ஒன்றரை மணி நேரம் - ஆகும்.

ஆக,  ஏழரை நாழிகைப் பொழுது என்பது மூன்று மணி நேரம்.

இந்த ஏழரை நாழிகைப் பொழுது - சிவாலயத்தில் இருப்பதனால் - 
மனித வாழ்வினைச் செம்மைப்படுத்தும் சனைச்சரனின் அன்பும் அருளும் நமக்கு எளிதில் கிட்டும்.

சனைச்சர மூர்த்தி ஒரு ராசியைப் பீடித்திருப்பது ஏழரை வருடங்களுக்கு. ஒவ்வொரு ராசியிலும் சனி பகவானுடைய ஆட்சிக் காலம் இரண்டரை ஆண்டுகள்.

இவருடைய  ஆட்சிக் காலத்தில் தான் - நாம் ஒவ்வொரு கோயிலாகத் தேடி ஓடுகின்றோம்.

சிவ வழிபாடு செய்யும்படித் தூண்டுவதில் - 
ஸ்ரீசனைச்சரனுக்கு தனியானதொரு ஆனந்தம். 

ஏழரைச் சனியோ, அஷ்டமச் சனியோ - எதுவானாலும் - மாலை வேளையில் ஏழரை நாழிகைப் பொழுது - சிவ சன்னதியில் இருக்கப் பழகி விட்டால், சனைச்சரனின் அருள் வழித்துணையாய்  நம்முடன் வருவதை உணரலாம்.

ஆன்மாக்களின் அழுக்கை அடித்துத் துவைத்து வெளுத்து பக்குவப்படுத்தி இறைவனிடம் அனுப்புவதே சனைச்சர மூர்த்தியின் நோக்கம்!.

எப்படி என்றால் துன்பங்களின் எல்லை ஆலய வழிபாடு.

ஆலய வழிபாட்டின் நோக்கம் மனந் தூய்மை எனும் வாய்மை.

தூய்மையும் வாய்மையும் நந்தியின் அம்சங்கள்.

நம்மிடையே புழங்கி வரும் ஒரு சொற்றொடர் - 
நந்திபோல் குறுக்கே நிற்காதே!.. - என்பது.

குறுக்கே நிற்பவரா - நந்தி?..

குறிப்பாக நிற்பவர் - நந்தி!..

அர்த்தத்தை அனர்த்தமாக்கிக் கொள்வதில் நம்மவர்களுக்கு மகிழ்ச்சி..

அன்பு , அடக்கம், தூய்மை, வாய்மை - ஆகிய அனைத்தும் ஒருங்கே நிறையப் பெற்றவர் - நந்தியம்பெருமான்.

நந்தியம்பெருமான் வாகனம் மட்டுமன்றி -
ஈசனின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்.

அதிகார நந்தி எனும் விசேஷமான பதவி அவருடையது.

இந்த அம்சத்தில் நந்திதேவருக்கு நெற்றிக்கண்ணும், மழுவும் தண்டமும் சிவபெருமானால் வழங்கப்பட்டுள்ளது.


பிரளய காலத்தில் அம்பிகை உள்பட எல்லாரும் எல்லாமும் எம்பெருமானிடம் ஒடுங்கிவிட -

அப்போதும் அடக்கத்துடன் - ஐயனின் எதிரில் -

'' என் கடன் பணி செய்து கிடப்பதே!...'' 

எனத் தாழ்ந்து பணிந்து அமர்ந்திருப்பவர் நந்தியம்பெருமான் ஒருவரே!...

அப்போது -

தன்னந்தனியராக இறைவன் ஊழித்தாண்டவத்தினை நிகழ்த்துவது நந்தியம் பெருமானின் சிரசில்!..

அதன் பின்னரே இறைவனிடமிருந்து சக்தி வெளிப்பட்டு - சக்தியும் சிவமுமாக  இணைந்து ஆனந்தத் தாண்டவம் நிகழ்கின்றது.

பொங்கிப் பூரித்து - பெருகி வழியும் அமிர்த வெள்ளத்தில் -
அகில புவனங்களும் அண்ட சராசரங்களும் உற்பத்தி ஆகின்றன.

இப்போது இதைப் பொருத்திப் பாருங்கள்....

அன்பும் தூய்மையும் - நந்தியின் புற அழகு.
அடக்கமும் வாய்மையும் - நந்தியின் அக அழகு.


ஆலய வழிபாட்டினால் நம் மனம் செம்மையாகி -
புறந்தூய்மையும் அகந்தூய்மையும் அடையப் பெற்றால் -

நாம் யார்?..

நம் சிரசின் மேல் இறைவன் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்துவது எப்போது?..
நாமும் நந்தி என நலம் பெறுவோமேயானால்.. அப்போது!..

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப்படும்..

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்..

திருவள்ளுவப்பெருமான் கூறும் இந்த நெறிகளைக் கைக்கொண்டாலே - 
பிறவி எனும் பெருங்கடலின் ஆழம் குறைந்து விடும்.

நாம் எளிதாகக் கரை சேர்ந்து விடலாம்..
நாமும் நந்தியாகி விடலாம்!..

சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு 
அபாயம் ஒரு நாளும் இல்லை..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
திருச்சிற்றம்பலம்!..
* * * 

13 கருத்துகள்:

  1. பிரதோஷ பற்றிய விளக்கம் வெகு சிறப்பு... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களுக்கு நல்வரவு.. மகிழ்ச்சி..

      நீக்கு
  2. நானும் என் மனைவியும் இப்பொழுது தான் சிவாலயம் சென்று அகத்தீஸ்வரர் கோவில். பிரதோஷ தரிசனம் மற்றும் ஜெய ஜெய சங்கர சிவ சிவ சங்கர கோஷங்களுடன் சுவாமி அம்மன் ஊர்வலமும் கண்டு உளமகிழ்ந்தோம்.
    வந்த உடன் உங்கள் வலையில் சிவ பெருமான் எமது ஊரான தஞ்சையிலே சிறப்புற பிரஹத் ஈஸ்வர சன்னதி முன் நந்தி பகவானுக்கு சந்தன அபிஷேகமும் கண்டு உவகை க்கு எல்லையே இல்லை.

    நன்றி.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. இன்று மாலை சிவதரிசனம் செய்திருக்கவேண்டும். தவறிவிட்டது. வருத்தத்துடன் அமர்ந்திருந்த வேளையில் தங்கள பதிவு, பிரதோஷ சிவபெருமானின் தரிசனத்தை என் வீட்டிலேயே கொண்டுவந்து வழங்கிவிட்டது! மிக்க நன்றிகள்!! - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  4. அன்புள்ள தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன்.

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (15.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
    நினைவில் நிற்போர் - 15ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/15.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா.. தங்களுக்கு நல்வரவு..

      அன்பின் அண்ணா VKG அவர்கள் - தமது தளத்தினில்,
      நமது தளத்தினை அறிமுகம் செய்தமையை - மகிழ்வுடன் அறிவித்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

      தங்கள் பாராட்டுரையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..
      வாழ்க நலம்..

      நீக்கு
  5. பிரதோஷம் பற்றிய பல அரிய செய்திகளை அறிந்தேன். நந்தியம்பெருமான் பற்றிய தகவல்கள் ஆச்சர்யப்படவைத்துவிட்டன. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களை நேற்றே எதிர்பார்த்தேன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அன்புடையீர்.. தங்களுக்கு நல்வரவு..

    அன்பின் அண்ணா அவர்கள் - தமது தளத்தினில்,
    நமது தளத்தினை அறிமுகம் செய்தமையை மகிழ்வுடன் அறிவித்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    தங்கள் பாராட்டும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  7. தங்களின் பதிவுக்கு பொருத்தமான குறள் எடுத்தாலுமை அருமை, வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே வெளியூர் பயணமா!..

      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..