நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 17, 2013

சூடிக் கொடுத்தாள்


1280 வருடங்களுக்கு முன் பங்குனி உத்திரத்தன்று தான் -  ஸ்ரீ வில்லிபுத்தூரில்

ஆழியில் ஆதிசேஷ அரவணையில் அரிதுயில் கொள்பவனும், ஆழியுடன் ஆழிச்சங்கு மற்ற அணிகலன்களைத் தாங்கியவனும்,  ஆகிய அரங்கன் -   

மத்தளங்களும் வலம்புரிச் சங்குகளும் சூழ்ந்து இசைக்க - பூரண கும்பம் என பொற்குடங்கள் வைத்து, சுற்றிலும் அழகிய தோரணங்கள் கட்டப்பட்ட முத்துப் பந்தலின் கீழ்  -

விஷ்ணு சித்தர் எனப்பட்ட பெரியாழ்வார் தன் அன்பு மகள், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி  ஆகிய - கோதை நாச்சியாரின்  கைத்தலம் பற்றினான்.

பங்குனி உத்திரத்தன்று தான், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி - அரங்கனை அணைந்து ஆண்டாள் ஆயினாள்!... 

ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணு சித்தர் என்ற புண்ணியர் ஸ்ரீவடபத்ர சயனப் பெருமாள் திருக்கோயிலில் பூமாலையுடன் பாமாலையும்  தொடுத்து பெருமாளின் கைங்கர்யத்தில் அளப்பரிய ஆனந்தத்துடன் வாழ்ந்து வந்தார். இவ்ரே பின்னாளில் பெரியாழ்வார் என மதிக்கப்பட்டவர்.

ஒருநாள்  பெருமாளின் கைங்கர்யத்திற்கு என விளங்கிய பூவனத்தில்  மலர் கொய்த போது, திருத்துழாய் மாடத்தின் அருகில், அழகானதொரு பெண் குழந்தையைக் கண்டெடுத்தார். அந்நாள் - நள வருஷம் ( 716 ) ஆடி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தியும்  -  பூர நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினம்.

அந்தக் குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டு சீராட்டிப் பாரட்டி வளர்த்து வந்தார். அன்புடன் வளர்க்கப்பட்ட கோதை நற்கல்வி கற்றுத் தெளிந்தாள்.

நாளும் - தந்தையின் மூலமாக யது குலக் கண்ணனின் லீலைகளைப் பற்றி அறிந்து கொண்ட கோதை - கண்ணனின் மீது தீராத அன்பு கொண்டாள். வளைக்கரங்களால் பூமாலை தொடுத்தவள் வளர்தமிழால் பாமாலையும் தொடுத்தாள்.


தான் வளரும்  ஸ்ரீவில்லிப்புத்தூரைக் கோகுலமாகக் கொண்டாள். தானே கோபிகையாக மாறினாள். பெருமாளை வேண்டிப் பாசுரங்கள் பல பாடினாள்.

மார்கழியில் தன்னை ஒத்த பெண்களுடன் பாவை நோன்பு எனப்படும் காத்யாயனி விரதத்தினை நோற்று தன் உள்ளங்கவர் கள்வன் கண்ணனையே மணாளனாக அடைய செந்தமிழ்க்கவி மாலை பாடினாள்.

''மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால்'' - என்று,  கோதை இயற்றிய திருப்பாவைப் பாடல்கள் முப்பதும் மங்களகரமானவை. இவை இடை நிற்க -

ஒருநாள், ஸ்ரீவடபத்ர சயனனுக்கு கைங்கர்யம் செய்த பொழுது பூமாலையில் நீளமான முடியினை கண்டு அதிர்ந்தார். உண்மையினை அறிய வேண்டி பெரியாழ்வார் மறைந்திருந்து நோக்க - கோதை தான் தொடுத்த மாலையினை - தானே அணிந்து அழகு பார்த்து, பின் அதையே பெருமாளுக்கு என அனுப்பி வைப்பதைக் கண்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார்.

இருப்பினும் கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் - அன்றைய தினம்,

கோதை தொடுத்துக் கொடுத்த மாலையினை ஒதுக்கிவிட்டு, வேறு ஒன்றைத் தாமே - தம் கையால் தொடுத்து திருப்தியுடன் பெருமாளுக்கு அணிவித்தார். அழகு பார்த்தார். ஆனால் பெருமாள் - அதை நிராகரித்து,

 '' கோதை சாதாரண மானுடப் பிறவியல்ல!... அவள் அணிந்த பூமாலைகளே நமக்கு உகந்தவை!.... அவள் சூடிக்கொடுத்த மாலைகளையே சூட்டுவீராக!...'' - என்று திருவாய் மலர்ந்தார்.

ஆண்டளக்கும் ஐயனே - சூடிக் கொடுத்த மாலையைத் தேடிக் கேட்கின்றான் எனில் கோதையின் அன்பினில் குற்றமும் உண்டோ!...


கோதை - காதல் சிறகினைக் காற்றில் விரித்தாள். கண்ணனைக் கண்ணுக்குள் கணவனாக வரித்தாள்.

''கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ 
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ...''

- என்று சிந்தித்தாள். சிந்தையெல்லாம் நிறைந்த கண்ணனையே வந்தித்தாள்.

"வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரணண் நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான்" 


- என்று  தான் கனாக் கண்டதை உரைத்தாள் - கோதை.  

மகள் பிதற்றுகின்றாள் என உணர்ந்து கொண்ட பெரியாழ்வார்  தன் மகளுக்கு நல்லதோர் நாளில் மணம் முடித்து வைக்க விரும்பி வரனைத் தேடினார். இதனை அறிந்தாள் கோதை. தந்தையின் முன் வந்து நின்றாள்.

"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன்வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன்!...."

- முன்னமே கனவில் முறைப்படி அவனுடன் திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் மீண்டும் ஒரு கல்யாணமா?.. நான் அரங்கனுக்கு என விதிக்கப் பட்டவள். அதை விடுத்து வேறு எவர்க்கும் முயன்றால் -

வானிடை வாழும் அவ்வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடை திரிவதோர்  நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை ஆழிசங்கு  உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த  என்தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில்லேன் கண்டாய் !.. -

- என்று உறுதிபட மொழிந்தாள்.

அதைக் கேட்ட ஆழ்வார் செய்வதறியாது திகைத்தார். ''... இப்படியும் ஒரு பெண் பித்தாகி இருப்பாளோ!..'' - மிகுந்த வருத்தத்துடன் உறங்கியவரின் கனவில் அரங்கன் மொழிந்தான் - ''...திருஅரங்கத்திற்கு அழைத்து வருக!...''  - என்று.

கோதையின் மீது பாசத்தை மழை எனப் பொழிந்து வளர்த்தவர்  பெரியாழ்வார்.  எனவே அரங்கனின் சொல்லைத் தலை மேற்கொண்டு,

திருஅரங்கத்தில் ரங்கராஜனுக்கு மணம் செய்து கொடுப்பதற்காக கோதையை ஸ்ரீரங்கத்திற்கு முத்துப்பல்லக்கில் அழைத்துச் சென்றார் பெரியாழ்வார்.


புதுப்புனல் பொங்கித் தவழ்ந்த காவிரிக்கரையை நெருங்கினர். மறையோரும் மக்களும் கூடிநின்று மங்கல வாழ்த்தொலிகளுடன் இவர்களை வரவேற்றனர்.

திருமணக் கோலங்கொண்டு திருஅரங்கப் பெருங்கோயிலினுள் - நுழைந்த கோதை,   கருவறையினை நோக்கிச் சென்றாள்.

ஸ்ரீரங்கநாதனின் அரவணையை நெருங்கிய சுடர்க்கொடி - சுடராக, அவனுடன் கலந்தாள். கண் இமைக்கும் பொழுதில் - தன் கண்ணின் இமையான மகளைக் காணாத ஆழ்வார் திடுக்கிட்டார். திகைத்தார்.

''...தன் கண்முன் ஓடியாடி வளர்ந்தவள், தண்மலர்த் தாமரையாய் மலர்ந்தவள்,  இன்று பெருமானுடன் நீருடன் நீர் போல இரண்டறக் கலந்தாள்.  ஆண்டானை ஆண்டாள்!.. இனி என் கண்ணை என் கண்களால் காண்பது எப்போது!...'' - என அரற்றினார். ஆற்றாமை மிகுதியால்  -  கண்கள் பெருகி வழிந்தன.

அப்போது  அரங்கன் - தன்னை ஆண்டாளுடன் சேவை சாதித்து அருளினான்.

தன் மகளை அரங்கன், அணைத்துக் கொண்டதை அறிந்த ஆழ்வார், தன் ஊரில் வைத்து ஆண்டாளை திருமணம் செய்து கொள்ளும்படி விண்ணப்பித்துக் கொண்டார். ஸ்ரீரங்கநாதனும் மாமனாரின் கோரிக்கையை ஒப்புக்கொண்டார்.

அதன்படி பங்குனி உத்திரத்தன்று, ஸ்ரீரங்கநாதன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி முறைப்படி ஆண்டாளுக்கு மாலையிட்டு திருமணம் செய்து கொண்டார்.


ஆண்டாள் திருமணக்கோலத்தில் எழுந்தருளிய போது, கருடனைக் கனிவுடன் நோக்கி ஐயனின் அருகில் - மாப்பிள்ளைத் தோழனாக இருக்கப் பணித்தாள்.

இதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருக்கல்யாண உற்சவம் 10 நாள் நிகழ்வுறுகின்றது. பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள், ரங்கமன்னார் திருக்கல்யாணமும், தேர்த்திருவிழாவும் வெகு சிறப்புடன் நடக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கும்போது, பெரியாழ்வாரின் வம்சாவழியினர் ரங்கநாதப் பெருமானை பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்று, தங்கள் பெண்ணை மனப்பூர்வமாக, முறைப்படி கன்னிகாதானம் செய்து கொடுக்கின்றனர்.

ஸ்ரீஆண்டாள் அருளிய "வாரணயிரம் சூழஞ் ெய்'' எனத் தொடங்கும் திருக்கல்யாணப் பாடல்களை பக்தியுடன் பாராயணம் செய்யும் கன்னியர் விரைவில் திருமணக்கோலங் கொள்வர் என்பது காலங்காலமாக நிலவி வரும்  நம்பிக்கை.

ஆண்டாள் அருளிய திருப்பாசுரங்கள், அனைவரும் படித்து இன்புற்றுப் பெரும் பயனுற வேண்டியவை.

ஆண்டாள் அருளிய திருப்பாசுரங்களைத் தினமும் பாடி - 

திருப்பாவையை நாம் பின்பற்றினால், திருமகள் நம்மைப் பின்பற்றுவாள் என்பது திருக்குறிப்பு!...

ஆட்கொண்ட அரங்கன் தாள்மலர்  போற்றி!...
ஆண்டாள் திருவடிகள் போற்றி!... போற்றி!...

'' திருச்சிற்றம்பலம்!...''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..