நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 09, 2013

ஸ்ரீஆஞ்சநேயர்

thanjavur14
ஸ்ரீஆஞ்சநேயர், கேசரி - அஞ்சனாதேவி என்ற உத்தமமான வானர தம்பதியர்க்கு வாயுபகவான் அருளால் ருத்ர அம்சத்துடன் மார்கழி மாதம் - மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். 

வானர வீரனான கேசரியும் அஞ்சனாதேவியும் வனத்தில் தவமிருந்த முனிவர்களுக்கு பலவகையினிலும் உறுதுணையாய் இருந்ததன் பொருட்டு, முனிவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாயினர். 

உலகம் உய்வடைய வேண்டி பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும்  எம்பெருமான் - ஸ்ரீராமபிரானாக திருஅவதாரம் கொள்ள திருஉளம் பற்றிய நேரத்தில், 

ஸ்ரீமன் நாராயணமூர்த்தியுடன் ருத்ர அம்சமும் பூமியினில் அவதரிக்க கேசரி - அஞ்சனா தம்பதியினரே - கருத்தில் கொள்ளப்பட்டனர் என்றால் இவர்களின் பெருமையினை என்ன என்பது!..... அனுமன் ருத்ர அம்சம் என்பதனை அருணகிரி நாதர் - திருப்பரங்குன்ற திருப்புகழில் குறிப்பிடுகின்றார்.

அனுமன், வாயு புத்திரன் என்பன  திருப்பெயர்கள். மாருதம்  ஆகிய வாயுவின் மகன் எனும் பொருளில் மாருதி எனும் திருப்பெயர் பிரசித்தமானது.

அனுமன் குழந்தையாய் இருந்தபோது, சூரியனை - பழம் என  நினைத்து அதைப் பறிப்பதற்காக வானில் தாவி சூரியனை நெருங்கினார். இதைக் கண்ட இந்திரன் அனுமனைத் தடுக்க வேண்டி - 

'' ஒரு வானரத்திற்கு இத்தனை வலிமையா?...'' என அஞ்சி, ''அசுரர்களின் வேலை இது''... என்று வழக்கம் போல தவறாக முடிவெடுத்து - வஜ்ராயுதத்தால் அனுமனை அடித்தான். 

இந்திரனின் அடாத செயலைக் கண்டு வெகுண்ட வாயு, தாடையில் அடிபட்டதால் மயக்கமடைந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஒரு குகைக்குள் நுழைந்து தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டான்.

வாயுவின் இயக்கம் நின்றதால் பிரபஞ்சம் தடுமாறியது. நிலைமையினை உணர்ந்த மும்மூர்த்திகளும் ஏனைய தேவர்களும்  அனுமனை பற்பல வரங்களால் சிறப்பித்தனர். இதனாலேயே மறுபடியும் அனுமன், சூரியனைத் தொடர்ந்து சென்று ''ஹரி ஓம்'' என மந்திர உபதேசம் பெற்றார். பின் யாக்ஞவல்கிய மகரிஷியிடம் வேதங்களைக் கற்றார். மகாபலசாலியாகவும் ஆனார். 

சிறு பிள்ளைக் குறும்புகளால் தன் சக்தியினை - தானே மறந்தவரானார். அதே சமயம் எவரேனும் போற்றித் துதித்தால், அந்த சக்தி பன்மடங்காக வளரும் என வரமும் பெற்றவர். தாய் தந்தையரிடம் பெரு மதிப்பும் மரியாதையும் கொண்டு விளங்கியவர். பிரம்மசர்ய விரதம் பூண்டவர். ஸ்ரீராமபிரானின் வருகையினை எதிர்நோக்கிக் காத்திருந்தவர்.  

கால ஓட்டத்தில் சுக்ரீவனின் முதலமைச்சராக இருந்து, கிஷ்கிந்தா வனத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தபோது தொலைவில் ராம - லக்ஷ்மணரைக் கண்டார். அதுவரை ராமனை நேரில் கண்டிராத அனுமன் உள் உணர்வால் உந்தப்பட்டு  "என் ராமனோ" என ஐயுற்றார். 

ஒரு அந்தணச் சிறுவனைப் போல உரு மாறி அவர்கள் எதிரில் சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். வந்திருப்பவர்கள் ஸ்ரீராம - லக்ஷ்மணர் தான் என அறிந்து கொண்ட அனுமன் தன்னுடைய சுய உருவத்தினை வெளிப்படுத்தி - மகிழ்ச்சியுடனும் பக்தியுடனும் வணங்கி நின்றார். ஸ்ரீராமனும் சந்தோஷத்துடன் அனுமனின் மதி நுட்பத்தைப் பாராட்டி  வாழ்த்தினான். அனுமன் மூலமாகவே ராம - சுக்ரீவன் நட்பு விளைந்தது.  

தென் திசையை நோக்கி சீதா பிராட்டியைத் தேடிச் சென்ற வேளையில் - அன்னையைக் காணாது மனம் நொந்த அங்கதனும் மற்றவர்களும் தம் உயிரை மாய்த்துக் கொள்ள முயலும் போது அவர்களுடைய மனத் துயரை மாற்றி, அவர்களுடைய உயிரைக் காத்தவர் அனுமன். 

சீதையைத் தேடி மகேந்திர மலையிலிருந்து வானில் பறந்து பெருங்கடலைக் கடந்து, இலங்கையில் இறங்கி - இராவணனின் நெஞ்சுரத்திற்கு நெருப்பு வைத்து - அவன் சரிவுக்கு அடிகோலியவர் அனுமன். தன் உருவினை தான் விரும்பும் வண்ணம் சுருக்கவும் பெருக்கவும் மாற்றிக் கொள்ளவும் வல்லமை உடையவர் அனுமன்.

அதேபோல இராவணனின் கொடுஞ்சொற்களைத் தாங்க மாட்டாதவளாக சீதை,  தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயலும் போது "ராம் ராம்" என்று முழங்கியவாறே சீதையின் மனத் துயரை மாற்றியவர் அனுமன். சீதையினால் சிரஞ்சீவியாக திகழ்வதற்கு வாழ்த்தப்பட்டவர் அனுமன்.


ஸ்ரீராமனின் கணையாழியினை சீதையிடம் கொடுத்தும்,  சீதையின் சூடாமணியினை ஸ்ரீராமனிடம் கொடுத்தும்  - இருவருக்கும் சந்தோஷத்தினை ஏற்படுத்தியவர் அனுமன்.

ஸ்ரீராம - ராவண யுத்தத்தின் போது இந்திரஜித்தின் மாயாஸ்திர தாக்குதலில் மூர்ச்சையான இளையபெருமாளின் உயிர் காக்க வேண்டி சஞ்ஜீவி மூலிகையினை - மலையுடன் பெயர்த்துக் கொணர்ந்தவர் அனுமன். யுத்தம் முடிந்ததும் சிவபூஜைக்கு என காசியிலிருந்து லிங்கம் எடுத்து வந்தவர் அனுமன். வான் வழியில் விரைந்து வந்து ராமனின் வருகையினை பரதனுக்கு தெரிவித்து - பரதனின் அக்னி பிரவேசத்தினைத் தடுத்தவர் அனுமன்.  

ஸ்ரீராின் முடிசூட்டு விழாவின் போது,  சீதை அன்பின் பரிசாக அளித்த  முத்து மாலையில் ராமனைத் தேடி -  எல்லோரும் அறியும்படி - தன்  நெஞ்சைப் பிளந்து இதயக் கமலத்தில் கொலுவிருக்கும் ஸ்ரீராமனைக் காட்டியவர் அனுமன்.

இராமாயணம் தவிர மகாபாரதத்திலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. செளகந்தி மலரை பாஞ்சாலிக்காக பீமன் தேடி வரும் வழியில் - அவனுடைய அகங்காரத்தை மாற்றி, பீமனைக் கட்டித் தழுவி அவன் உடலில் மேலும் வலிமையினை ஊட்டியவர் அனுமன். பின் அர்ச்சுனனுக்காக ஸ்ரீகிருஷ்ணன் ஓட்டிய தேரின் கொடியில் அமர்ந்து, அர்ச்சுனனுடன் கீதை உபதேசம் கேட்டவர். ஸ்ரீகிருஷ்ணன் பாஞ்சசன்னிய சங்க நாதம் எழுப்பும் வேளையில் தாமும் பெருங்குரல் கொடுத்து எதிரிகளை கதிகலங்க வைத்தவர். பாரதப் போர் முடியும் வரையில் - தேர் கொடியில் இருந்தபடி கெளரவர்களின் மந்திர அஸ்திரங்களில் இருந்து  ஸ்ரீகிருஷ்ணன் துணையுடன் அர்ச்சுனனைக் காத்தவர் அனுமன்.

இத்தனை சிறப்புகளை உடைய அனுமன் பூமியில் அவதரிக்கக் காரணம் - நந்தியம்பெருமானின் சாபம்.  கடுந்தவம் செய்து வரம் பல பெற்ற இராவணன் குபேரனிடமிருந்து  அவனுடைய புஷ்பக விமானத்தைப் பறித்துக் கொண்டு   அதில் செருக்குடன் வான் வெளியில் பயணித்தபோது திருக்கயிலாய மலையினை நெருங்கினான்.  

அப்போது விமானத்தின் வேகம் தடைப்படவே - மூடனாகி, திருக்கயிலாய மலை,  தனது பயணத்திற்கு தடையாக இருப்பதாகக் கருதினான்.  ஆத்திரத்துடன் அடாத செயலாக திருக்கயிலாய மலையினை பெயர்த்தெடுத்து எடுக்க முயற்சித்தான். இதைக் கண்ட நந்தியம்பெருமான் அவனைத் தடுத்து திருக்கயிலாய மலையினை வலம் வந்து செல்லுமாறு நல்லுரை கூறினார். 

மூர்க்கனான இராவணன் - " குரங்கு போல முகத்தை வைத்துக் கொண்டு நீயா எனக்கு புத்தி சொல்கிறாய்....." என இகழ்ந்தான். சீற்றமடைந்த நந்தியம்பெருமான், " குரங்கினால் உன் நாடும் நகரும் அழிய நீயும் அழிவாய்" - என சாபம் விடுத்தார். அவன் அப்படியும் கேட்காமல் திருக் கயிலாய மலையினைப் பெயர்த்தெடுக்க - சிவபெருமான் கால் விரலை ஊன்றியதும், மலையின் அடியில் சிக்கிக் கொண்டு ரத்தச் சகதியாகி  " ஓ..." என அலறி, பின் சாம கானம் பாடி, ஈசனிடம் வாழ்நாளும் வரங்களும் பெற்றுக் கொண்டு உயிர் தப்பி ஓடிப் பிழைத்தான். 

அப்போது ஓடி உயிர் பிழைத்தாலும் நந்தியம்பெருமான் விடுத்த சாபத்தின்படி,  பின்னாளில் இராவணன் அழிய அனுமனின் அளவிலா ஆற்றலும் ஒரு காரணமாயிற்று.
" ஸ்ரீராம் ஜயராம் " எனும் நாம ஜபத்தினால் மிக்க மகிழ்ச்சியடைபவர் அனுமன். தன்னைப் பணிபவர்க்கு எல்லாவித இன்னல்களையும் நீக்குபவர் அனுமன்.

அப்படிப்பட்ட அனுமனின் அவதார தினம் மார்கழி 27 (11.01.2013) வெள்ளிக்கிழமை. அனுமனை வணங்கி உய்வடைவோம்.. 

நாம் நம் வாழ்வில் கடைப்பிடிக்கும் "அன்பும் அடக்கமும் " ஸ்ரீஆஞ்சநேயரின்  அருளுக்கு  நம்மை இட்டுச் செல்வன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..